அந்தியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் சாவு


அந்தியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் சாவு
x

மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் சாவு

ஈரோடு

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் அணைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மயில் (வயது 40). விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் 6 ஆடுகள் மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வந்த ஆடுகளை நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் உள்ள பட்டியில் மயில் அடைத்தார். வழக்கம்போல் நேற்று காலை எழுந்து வந்து பார்த்தார். அப்போது 2 செம்மறி ஆடுகளின் கழுத்துப்பகுதி கடிக்கப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதன் அருகில் சேவல் ஒன்றும் இறந்து கிடந்தது. உடனே அவர் இதுபற்றி அந்தியூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் வனச்சரகர் உத்தரசாமி, அந்தியூர் கிராம நிர்வாக அதிகாரி யசோதா தேவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

ஆனால் எந்த விலங்கு கடித்து உள்ளது என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை. எண்ணமங்கலம் கால்நடை டாக்டர் அருள்முருகன் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

---


Next Story