மர்ம காய்ச்சலால் குழந்தைகள், பொதுமக்கள் பாதிப்பு


மர்ம காய்ச்சலால் குழந்தைகள், பொதுமக்கள் பாதிப்பு
x

குளித்தலை அருகே மர்ம காய்ச்சலால் குழந்தைகள், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூர்

மர்ம காய்ச்சலால் பாதிப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், திம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கணக்கப்பிள்ளையூர், முதலிகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் காரணமாக பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குளித்தலை, கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உடல்நிலை சரியாகி சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் கடந்த 15 நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டிகளை தூய்மை செய்தல், கொசு மருந்து அடித்தல் போன்ற தூய்மை பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல காய்ச்ச லால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆய்வு செய்ய கோரிக்கை

ஆனால் மர்ம காய்ச்சலால் தொடர்ந்து பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் குடிநீரை ஆய்வு செய்த ேபாது குடிநீரால் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து அறிய முடியவில்லையாம்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதிகளில் உரிய ஆய்வு மேற்கொண்டு காய்ச்சல் பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story