ஆற்றில் மூழ்கி மாயமான வாலிபர் பிணமாக மீட்பு


ஆற்றில் மூழ்கி மாயமான வாலிபர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:46 PM GMT)

நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.

திருவாரூர்

நன்னிலம்:

நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.

ஆற்றில் மூழ்கி மாயம்

நன்னிலம் அருகே உள்ள இலவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது24). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை கார்த்திக் மற்றும் அவரது தம்பி கணேஷ், நண்பர் முகேஷ் ஆகியோர் கங்களாஞ்சேரியில் உள்ள வெட்டாற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார்த்திக் ஆற்றில் மூழ்கினார். இதை பார்த்த அவரது நண்பர் அவரை மீட்க முயற்சித்தும் முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கி மாயமானார்.

பிணமாக மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி விடிய, விடிய தேடியும். அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் தீயணைப்பு துறையினர் 20 அடி ஆழத்தில் புதைந்திருந்த கார்த்திக்கின் பிணத்தை மீட்டனர்.

பின்னர் நன்னிலம் போலீசார், கார்த்திக் உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெட்டாற்றில் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதால் அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story