நாகர்கோவில், இரணியல் ரெயில் நிலையங்களில் கோட்ட மேலாளர், விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு


நாகர்கோவில், இரணியல் ரெயில் நிலையங்களில் கோட்ட மேலாளர், விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 3 Jun 2023 6:45 PM GMT (Updated: 3 Jun 2023 6:46 PM GMT)

நாகர்கோவில், இரணியல் ரெயில் நிலையங்களில், விஜய்வசந்த் எம்.பி. மற்றும் கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில், இரணியல் ரெயில் நிலையங்களில், விஜய்வசந்த் எம்.பி. மற்றும் கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு நடத்தினர்.

விஜய்வசந்த் எம்.பி.- அதிகாரி ஆய்வு

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் சர்மா நேற்று காலை நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை விஜய்வசந்த் எம்.பி. ரெயில் நிலையத்தில் சந்தித்து பேசினார். அவரிடம் நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் டவுன், இரணியல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் கூட்டாக சென்று ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரங்கள், பிட் லைன் கிராசிங், பராமரிப்பு கூடம், ரெயில்வே ஊழியர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, கோட்டார் ரெயில் நிலையத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள், ரெயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவரங்களை சர்மா கேட்டறிந்தார்.

ரெயில் நிலையங்களில்...

மேலும் பிளாட்பாரங்களில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள், பயணிகள் தங்கும் கட்டிடம், கழிவறை, துணிகள் சலவை செய்யும் இடம், இரட்டை ரெயில் பாதை பணிகள் ஆகியவற்றையும் மேலாளர் சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கோட்டார் ரெயில் நிலைய மேலாளர் முத்து மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள், ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் பலரும் உடன் இருந்தனர்.

இதனைதொடர்ந்து சர்மா நாகா்கோவில் டவுன் மற்றும் இரணியல் ஆகிய ரெயில் நிலையங்களிலும் ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடந்து வரும் இரட்டை ரெயில் பாதை பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.


Next Story