வடசெட்டியந்தல் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணி கலெக்டர் நேரில் ஆய்வு


வடசெட்டியந்தல் ஊராட்சியில்    நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை பணி    கலெக்டர் நேரில் ஆய்வு
x

வடசெட்டியந்தல் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் நடந்து வரும் தூய்மை பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள வடசெட்டியந்தல் கிராமத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அவரும் தூய்மை பணியை மேற்கொண்டார்.

பின்னர் வீடு, வீடாக சென்று பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குப்பை மேலாண்மை குறித்தும், மக்கும், மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது என்பது குறித்தும், விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார். தப்போது மழை பெய்து வருவதால், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கி நின்றால், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வழிவகுக்கும். எனவே சுற்றுப்புற பகுதகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டீ கப், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், டயர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்திட வேண்டும்.

ஒருங்கிணைந்து தூய்மை பணி

மேலும் நமது மாவட்டம், நமது ஊராட்சியை தூய்மையாக பராமரித்திட பொதுமக்கள் தன்னார்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஒன்றிய பொறியாளர்கள் அருண்பிரசாத், சபான்கான், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன்நாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி மணிவண்ணன், துணைத் தலைவர் கலைச்செல்வன், ஊராட்சி செயலாளர் பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story