காவிரி தாய்க்கு சீர்கொடுத்த நம்பெருமாள்


காவிரி தாய்க்கு சீர்கொடுத்த நம்பெருமாள்
x

காவிரி தாய்க்கு நம்பெருமாள் சீர் கொடுத்தார்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

சிறப்பு பூஜைகள்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் காலை நேரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மாலையில் காவிரி தாய்க்கு மங்கல பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார். அதன்படி இந்தாண்டு ஆடி 18-ம் நாளான நேற்று நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிவரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மங்கல பொருட்கள்

இதைத்தொடர்ந்து நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மாலை 4.50 மணியளவில் நடைபெற்றது. அப்போது பட்டு சேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கல பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து, அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story