தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி; உத்தரபிரதேசம், சண்டிகர் அணிகள் வெற்றி

கோவில்பட்டியில் நடந்த தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி; உத்தரபிரதேசம், சண்டிகர் அணிகள் வெற்றி பெற்றன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. 5-வது நாளாக நேற்று நடந்த முதலாவது போட்டியில் உத்தரபிரதேசம் அணியும், தெலுங்கானா அணியும் மோதின. இதில் அபாரமாக விளையாடிய உத்தரபிரதேச அணி 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக அந்த அணி வீரர் அமீர் அலி தேர்வு செய்யப்பட்டார்.
2-வது போட்டியில் சண்டிகர் அணி 10-2 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்காள அணியை வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக சண்டிகர் அணி வீரர் சுரீந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டார். 3-வது போட்டியில் டையூ டாமன் அணி 6-1 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியை வென்றது. டையூ டாமன் அணி வீரர் ரோஷன் ஆட்டநாயகனாக தேர்வானார். 4-வது ஆட்டத்தில் கர்நாடக அணி 22-1 என்ற கோல் கணக்கில் குஜராத் அணியையும், 5-வது போட்டியில் ஹரியானா அணி 9-0 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியையும் எளிதில் வென்றது.