அனைத்து கிராமங்களிலும் சாதி தெருக்களுக்கு தேசிய தலைவர்கள் பெயரை சூட்ட வேண்டும்:கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்


அனைத்து கிராமங்களிலும் சாதி தெருக்களுக்கு தேசிய தலைவர்கள் பெயரை சூட்ட வேண்டும்:கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 Aug 2023 6:45 PM GMT (Updated: 16 Aug 2023 6:47 PM GMT)

அனைத்து கிராமங்களிலும் சாதி தெருக்களுக்கு தேசிய தலைவர்கள் பெயரை சூட்ட வேண்டும்என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளா்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் சாதி பெயர்களில் உள்ள தெருக்களுக்கு தேசிய தலைவர்கள் பெயரை சூட்ட வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

கிராமசபை கூட்டம்

மேலாத்தூர் கிராம பஞ்சாயத்தில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் மாவட்ட திட்டக்குழு தலைவருமான பிரம்ம சக்தி, மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபஞான தேவ்ராவ், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜவகர், மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஏ பி சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கிராம பஞ்சாயத்து உதவி இயக்குனர் உலகநாதன் வரவேற்று பேசினார். கிராம பஞ்சாயத்து செயலர் சுமதி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், கிராம பஞ்சாயத்து பகுதிகளில் சாலைகள், குடிநீர் வசதிகள் உள்ளதை ஆய்வு செய்தல் இணையதள மூலம் மக்கள் வரிவிதிப்புத் தொகையை கட்டுவது, அயோடின் உப்பின் பயன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வருவது உட்பட 14 தீர்மானங்களை வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கலெக்டர் வேண்டுகோள்

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில்,

மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக மேலாத்தூரும், இங்குள்ள தலைவர் சிறப்பாகவும் பணியாற்றி வருகிறார். இங்கு குளத்தில் உள்ள அமல செடிகளின் மூலம் மதிப்புக்கூட்ட பொருட்கள் தயாரிக்கும் பணியை எம்.பி. தொடங்கி வைத்தார். இப்போது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு அமலச்செடி மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் பிரபலமாகியுள்ளது. இந்த ஊர் பகுதிகளில் சுற்று வட்டாரங்களை பயிரிடப்படும் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனை வெற்றிலை வியாபாரிகள் பயன்படுத்தி கொண்டு வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.

சாதி பெயர்கள் நீக்கம்

நமது மாவட்டத்தில் தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசிய தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து திகழ வேண்டும், என்றார். இதை ஏற்று பஞ்சாயத்து தலைவர் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இக்கிராமத்திலிருந்த 9 தெருக்களில் இருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

இக்கூட்டத்தில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் பொற்செல்வன், தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாகப் பொறியாளர் ஜெயக்குமார், மாவட்ட திட்ட உதவி அலுவலர் லீமாரோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து துணை தலைவர் பக்கீர் முகைதீன் நன்றி கூறினார். கூட்டத்தில் பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


Next Story