ஆண்டிப்பட்டி அருகே 5-வது நாளாக நெசவாளர்கள் வேலை நிறுத்தம்:பேச்சுவார்த்தை தோல்வி


ஆண்டிப்பட்டி அருகே 5-வது நாளாக நெசவாளர்கள் வேலை நிறுத்தம்:பேச்சுவார்த்தை தோல்வி
x
தினத்தந்தி 6 Jan 2023 6:45 PM GMT (Updated: 6 Jan 2023 6:46 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே 5-வது நாளாக நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளர்களின் கூலி ஒப்பந்தம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர் சம்பள உயர்வு குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இதனால் சம்பள உயர்வு வழங்கக்கோரி டி.சுப்புலாபுரம் விசைத்தறி நெசவாளர்கள் கடந்த 2-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்றும் 5-வது நாளாக நீடித்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சக்கம்பட்டி பகுதி நெசவாளர்களும் நேற்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் ரூ.30 லட்சம் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெசவு தொழிலாளர்களின் வருவாயும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை கடந்த 4-ந்தேதி ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து 2-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்கள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்களை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 2 மணி நேரத்திரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு குறித்த எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.


Related Tags :
Next Story