ஆண்டிப்பட்டி அருகேஉலக கரடிகள் தின விழா


ஆண்டிப்பட்டி அருகேஉலக கரடிகள் தின விழா
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே உலக கரடிகள் தின விழா நடந்தது.

தேனி

உலக கரடிகள் தினத்தையொட்டி ஆண்டிப்பட்டி வனச்சரகம் சார்பில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தொடங்கி வைத்தார். டி.சுப்புலாபுரம் அரசு பள்ளி முன்பு தொடங்கிய ஊர்வலம் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக நடந்தது. இதில் வனத்துறையினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின் போது கரடிகள் பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு, வன விலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

இதைத்தொடர்ந்து, ஏத்தக்கோவில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் வனத்துறை சார்பில் உலக கரடிகள் தின விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தலைமை தாங்கி, உலக கரடிகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசும்போது, 'ஒவ்வொரு ஆண்டும் மழைப்பொழிவு குறைந்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இப்படியே சென்றால் மக்கள் வாழ்வது கடினமாகி விடும்.

அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் காடுகளை பாதுகாக்க வேண்டும். வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும். காடுகளையும், வன விலங்குகளையும் பாதுகாப்பது நமது அடிப்படை கடமை' என்றார். விழாவில் கரடியை போன்று முகமூடி அணிந்து கரடிகளை பாதுகாக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள்சுரேஷ் மற்றும் வனத்துறையினர் செய்திருந்தனர்.


Next Story