கூடலூர் அருகேவிளை நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்


கூடலூர் அருகேவிளை நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:47 PM GMT)

கூடலூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

தேனி

கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய பெருமாள் கோவில் புலம், சுரங்கணார் பீட், கழுதை மேடு, ஏகலூத்து ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் கம்பு, சோளம், மொச்சை, அவரை, துவரை பயிர் வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மேலும் இலவம் மரங்களும் அதிக அளவில் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி விளைநிலங்கள் அமைந்து உள்ளதால் அடிக்கடி காட்டுப்பன்றிகள் மற்றும் வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் அகழிகள் அல்லது சோலார் மின் வேலி கம்பிகள் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் வனத்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்த பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கம்பு, சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் விளைநிலத்தில் புகுந்த பன்றிகள் பயிர்களை தின்று சேதப்படுத்தின. இலவம் மரக்கன்றுகளை கடித்து நாசப்படுத்தின. எனவே விளை நிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க வனத்துறையினர் அகழிகள் அல்லது சோலார் மின் வேலி கம்பிகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story