ஜோலார்பேட்டை அருகே போலீஸ் ஏட்டு தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் ஏட்டு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி பசுமை நகர் பகுதியை சேர்ந்த சென்னன் என்பவரின் மகன் இன்பராஜ் (வயது 33). இவர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கலை என்ற மனைவியும் விஷ்வா (8), பவின் (6) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.18 லட்சம் கடன் பெற்று இன்பராஜ் வீடு கட்டியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி தனியார் வங்கியில் இருந்து திருப்பத்தூர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு வீட்டு பத்திரத்தை மாற்றம் செய்து தனியார் வங்கிக்கடனை அடைத்துவிட்டு கூடுதலாக ரூ.6 லட்சம் வங்கி கடன் பெற்றுள்ளார். இந்த வங்கிக்கடனை தவணை முறையில் செலுத்தி வந்துள்ளார்.
இதனால் கடன் சுமை அதிகமாகி விட்டது என வீட்டில் அடிக்கடி கூறி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து விட்டு நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டிலிருந்த அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் விரைந்து வந்து இன்பராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து தந்தை சென்னன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் சுமை அதிகமானதால் மனஉளைச்சலில் போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.






