முள்ளக்காடு அருகேவாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் சிக்கினர்


முள்ளக்காடு அருகேவாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 6 Aug 2023 6:45 PM GMT (Updated: 6 Aug 2023 6:45 PM GMT)

முள்ளக்காடு அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு ராஜிவ்நகர்7- வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது 3-வது மகன் முத்துராஜாவை, அஜித் குமார் என்பவர் நெற்றியில் பாட்டிலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்க முத்துராஜா தனது சகோதரர்களான சின்னராஜ், முகேஷ் ஆகியோருடன் அஜித்குமாரை தேடி தேவிநகருக்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த அஜித் குமாரிடம் முத்துராஜாவை தாக்கியது தொடர்பாக அந்த 3 பேரும் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கும், அஜித்குமார், அவரது கூட்டாளிகள் மகேஷ்குமார், திருமூர்த்தி, ஜேசு ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாரிமுத்து மகன்கள் தாக்கியதில் மகேஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோதத்தில் மாரிமுத்துவின் மூத்த மகன் தட்சிணாமூர்த்தியை கடந்த 4-ந் தேதி இரவில் அஜித் குமார், மகேஷ் குமார், திருமூர்த்தி, ஜேசு ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதில் காயங்களுடன் உயிர் தப்பிய அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவி நகர் கணேசன் மகன் மகேஷ் குமார் (23), காந்திநகர் முருகன் மகன் திருமூர்த்தி (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.


Next Story