பெண்ணாடம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் அழகான பெண் குழந்தை பிறந்தது


பெண்ணாடம் அருகே  ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்  அழகான பெண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:45 PM GMT)

பெண்ணாடம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவருடைய மனைவி முத்துமாரி (வயது 25). இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், முத்துமாரி 2-வது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் முத்துமாரிக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லை எனக் கூறி இரவு 2:30 மணி அளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில், கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காடு அருகே சென்றபோது, முத்துமாரிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து டிரைவர் ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தினார். தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ தொழில் நுட்புனர் ரேவதி, முத்துமாரிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையும், தாயும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story