பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி


பண்ருட்டி அருகே  மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2022 6:45 PM GMT (Updated: 20 Oct 2022 6:46 PM GMT)

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

கடலூர்

புதுப்பேட்டை,

பண்ருட்டி அருகே உள்ள மேல்அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கதிர்வேல் மகன் வினோத்குமார் (வயது 32), மாணிக்கம் மகன் மோகன் (24), பலாப்பட்டு பகுதியை சேர்ந்த விஜய் (24). கரும்பு வெட்டும் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் புதுப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பண்ருட்டி அடுத்த மணம் தவிழ்ந்தபுத்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பண்ருட்டியில் இருந்து அரசூர் நோக்கி வந்த கார் ஒன்று இவர்கள் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டதில் வினோத்குமார், மோகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

படுகாயமடைந்த விஜயை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான வினோத்குமார், மோகன் ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story