கம்பம் அருகேபுதர்மண்டி காணப்படும் 18-ம் கால்வாய்:சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


கம்பம் அருகேபுதர்மண்டி காணப்படும் 18-ம் கால்வாய்:சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே புதர்மண்டி கிடக்கும் 18-ம் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணை மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி உள்ளிட்ட மானவாரி பகுதிகளில் பல ஆயிரம் எக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு நிலத்தடி நீரை நம்பி காய்கறி, சோளம், கம்பு, நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு, தென்னை, வாழை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த பகுதியில் மழை குறைவாக பெய்து வந்ததால் நிலத்தடி நீர் மட்டம் அதாள பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் விவசாயம் பாதித்து நிலங்கள் தரிசாக மாறின. இந்த நிலையை மாற்ற கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 18-ம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த கால்வாயில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கூடலூர் முல்லைப்பெரியாறு வைரவன் கால்வாய் தலைமதகில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் 44 கண்மாய்களில் தேக்கி வைக்கப்பட்டு விவசாயம் நடைபெற்றது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்படைந்து வருகின்றன.

இந்நிலையில் 18-ம் கால்வாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. மேலும் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. குப்பைகள், மணல் மேவி உள்ளதால் வருங்காலங்களில் தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது. எனவே கால்வாயை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story