ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பஸ்-கார் மோதல்; டிரைவர் பலி


தினத்தந்தி 29 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 6:47 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பஸ்-கார் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பஸ்சும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

கார் டிரைவர்

நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரிடம் கார் டிரைவராக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் வேலை செய்து வந்தார்.

இவர்கள் இருவரும் நேற்று நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை முருகன் ஓட்டினார்.

பரிதாப சாவு

கருங்குளம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது காரும், திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பஸ்சும் மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

கார் டிரைவர் முருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் சரவணன் படுகாயம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் மற்றும் செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து காரணமாக திருச்செந்தூர்-நெல்லை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதை போலீசார் சரிசெய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story