நீட் தேர்வு: தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்


நீட் தேர்வு: தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
x
தினத்தந்தி 7 May 2023 12:51 AM GMT (Updated: 7 May 2023 1:02 AM GMT)

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

2023-24-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது.

தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கினாலும், தேர்வர்கள் காலை 11 மணியில் இருந்து தேர்வு எழுதும் மையத்துக்கு வரலாம் என்றும், பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்படும் என்றும், 1.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து இருக்கிறது.

மாணவர்கள் செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லம் நன்கு தெரிந்து கொண்டு மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்லும் பட்சத்தில் கடைசி நிமிட அவதியில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள முடியும். மாணவர்கள் நீட் தேர்வு தொடர்பான மையங்களை https://neet.nta.nic.in/ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Next Story