அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி; உண்ணாவிரதத்தை தொடர இடைநிலை ஆசிரியர்கள் முடிவு


அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி; உண்ணாவிரதத்தை தொடர இடைநிலை ஆசிரியர்கள் முடிவு
x

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் உண்ணாவிரதத்தை தொடர இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு இருப்பதாகவும், அதனை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27-ந்தேதியில் இருந்து குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

4-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. இதுவரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 140-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலும், அவர்களுடைய குடும்பத்தினர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆகியோருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் அவரிடம், இடைநிலை ஆசிரியர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 30 நிமிடம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களின் ஒற்றை கோரிக்கை ஏற்கப்படவில்லை. எந்த முடிவும் எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்தார்.


Next Story