'நெல்லை மேயர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்' - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்


நெல்லை மேயர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
x

நெல்லை மாநகராட்சி மேயர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில், கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 4 வார்டுகளில் அ.தி.மு.க.வும், மற்ற 51 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன.

இதையடுத்து தி.மு.க. பெரும்பான்மை வெற்றியோடு மாநகராட்சியை கைப்பற்றி, நெல்லை மாநகராட்சியின் மேயராக சரவணன் என்பவர் பதவியேற்றார். இதனிடையே நீண்ட நாட்களாக தொடரும் பல்வேறு சிக்கல்கள் குறித்து மாநகராட்சி மேயர் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சி பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பணமோசடி மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து 35 தி.மு.க. கவுன்சிலர்கள் இன்று திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் இன்று காலை 11 மணிக்கு நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து, மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, "ஒவ்வொரு இடத்திலும் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. நெல்லை மாநகராட்சி மேயர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்" என்று தெரிவித்தார்.

இன்று தி.மு.க. கவுன்சிலர்கள் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து பேசிய பிறகு, இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Next Story