நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்


நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
x

நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

நெல்லளவு கண்டருளினார்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. வசந்த உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். வசந்த உற்சவத்தின் 9-ம் நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.

சூர்ணாபிஷேகம்

வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. நாளையுடன் உற்சவம் நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story