26 நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம்


26 நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம்
x

நாகை மாவட்டத்தில் 26 நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டத்தில் 26 நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

புதிய கட்டிடம்

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோமதி தனபால், வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நடப்பு ஆண்டில் 16 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் என மொத்தம் 26 நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயன்பெறுவார்கள்

அதில் வேதாரண்யம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் கொள்முதல் நிலையம் புதிதாக கட்டப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் வண்டுவாஞ்சேரி, அண்ணாப்பேட்டை, வாய்மேடு மேற்கு ஆகிய கிராமங்களில் 600 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

நெல் மூட்டைகள்

இங்கு கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எண்ணிக்கை 26 ஆயிரம் ஆகும். விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை இங்கு திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்று பயன் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கர், கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story