ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும்பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி,பஸ் நிலையத்தை கலெக்டர் ஆய்வு


ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும்பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி,பஸ் நிலையத்தை கலெக்டர் ஆய்வு
x

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி மற்றும் பஸ் நிலையத்தை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

ஈரோடு

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி மற்றும் பஸ் நிலையத்தை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

பல்நோக்கு ஆஸ்பத்திரி

ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு அரசு ஆஸ்பத்திரியை பார்வையிட்டு, ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு நாள்தோறும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து, கட்டிடத்தை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, ஈரோடு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் வணிகவளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவற்றையும் பார்வையிட்டு, பஸ் நிலையத்தில் நடைபாதை மற்றும் இருக்கைகள் ஆகியவற்றை அமைத்து பயனாளிகள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதிகள் செய்துதர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும்பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி,பஸ் நிலையத்தை கலெக்டர் ஆய்வு

முன்னதாக ஈரோடு சம்பத் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையை பார்வையிட்டு, அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் பதிவேடுகளில் உள்ள அளவுகளின்படி அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மூட்டைகள் சரியாக உள்ளதா என்பது குறித்தும், ரேஷன் கடையில் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து சோலாரில் ரூ.63 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேலும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ள பஸ்கள் குறித்தும் கேட்டறிந்து, கட்டுமான பணியை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் இளஞ்செழியன், குடும்பநல இணை இயக்குனர் ராஜசேகர், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story