புதிய சமையல் கியாஸ் சிலிண்டர் டெபாசிட் தொகை ரூ.750 உயர்வு


புதிய சமையல் கியாஸ் சிலிண்டர் டெபாசிட் தொகை ரூ.750 உயர்வு
x

புதிய சமையல் கியாஸ் சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.750 உயர்த்தப்பட்டு, ரூ.2 ஆயிரத்து 200 ஆக நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

சென்னை,

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த சில ஆண்டுகளாகவே உயர்ந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி வந்தாலே சமையல் கியாஸ் சிலிண்டர் விலை எவ்வளவு ரூபாய் உயரும்? என்ற அச்சம் பெண்கள் மத்தியில் இருந்து வருகிறது.

தற்போது வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,018-க்கு விற்பனையாகி வரும் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக புதிதாக சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்குபவர்களுக்கான டெபாசிட் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்கியவர்களுக்கு எந்த டெபாசிட் உயர்வும் கிடையாது. புதிதாக இணைப்பு பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

டெபாசிட் ரூ.750 உயர்வு

அதன்படி வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற டெபாசிட் தொகை ரூ.1,450 ஆக இருந்து வந்தது. நேற்று முதல் புதிய இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தில் ரூ.750 உயர்த்தப்பட்டு, ரூ.2 ஆயிரத்து 200 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 2 சிலிண்டர் இணைப்பு பெற வேண்டுமானால் ரூ.4 ஆயிரத்து 400 டெபாசிட் செலுத்த வேண்டும். இதுதவிர சிலிண்டருக்குரிய ரெகுலேட்டர் விலையும் ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் 5 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டருக்குரிய முன்பணம் ரூ.800 ஆக உள்ளது. இதில் ரூ.350 அதிகரித்து, ரூ.1,150 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர கியாஸ் டியூப் மற்றும் பாஸ் புத்தகத்துக்கான கட்டணம் ரூ.150 மற்றும் ரூ.25 தனியாக செலுத்த வேண்டும். இந்த கட்டண உயர்வு புதிதாகப் பெறப்படும் இணைப்புகளுக்கு மட்டும் பொருந்தும்.

மேற்கண்ட தகவல்களை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பொதுமக்கள் அதிர்ச்சி

சமையல் கியாஸ் சிலிண்டருக்கான டெபாசிட் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1,250 கட்டணத்தில் இருந்து ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.1,450 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திய இந்த கட்டண உயர்வை பொதுமக்கள் நலன் கருதி ரத்துசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story