புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆம்பூர் அருகே காதலித்து திருமணம் செய்த 2 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரிய கோமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அருண்குமார் (வயது 22), கேரளாவில் பொக்லைன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மாமா முருகன் சேலத்தை சேர்ந்தவராவார். கடந்த சில ஆண்டுகளாக முருகனின் மகள் மிருதுளாவும் (19). அருண்குமாரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மிருதுளா, வீட்டில் உள்ள அறையில் சேலையில் தூக்குப்போட்டு தொங்கினார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மிருதுளாவை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவலறிந்ததும் உமராபாத் போலீசார் விரைந்து சென்று மிருதுளாவின் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத் தகராறு காரணமாக மிருதுளா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் மிருதுளாவின் சாவுக்கான காரணம் குறித்து வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story