புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பு: அரிசி, பருப்பு உள்பட உணவு பொருட்கள் விலை உயர வாய்ப்பு


புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பு: அரிசி, பருப்பு உள்பட உணவு பொருட்கள் விலை உயர வாய்ப்பு
x

புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பு விகிதங்கள் இன்று முதல் அமலாகும் நிலையில் அரிசி, பருப்பு உள்பட பல்வேறு உணவுப்பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.

இதனை தொடர்ந்து வரிவிதிப்பிற்குள்ளான வரி விதிப்பு மாற்றியமைக்கப்பட்ட பொருட்களின் பொருட்கள் விலை இன்று முதல் உயர வாய்ப்புள்ளது. பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிள் இடப்பட்ட பால்,தயிர்,மோர், பன்னீர் போன்ற பல்வேறு பொருட்களுக்கு முன்பு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படவில்லை.

தற்போது 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் இப்பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் பிராண்ட் பெயர் இல்லாத அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு முதல் முறையாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலையும் உயர வாய்ப்புள்ளது.

ஸ்டேஷனரி பொருட்கள் இதேபோன்று அட்லஸ் வரைபடங்களுக்கும், ஸ்டேஷனரி பொருட்கள், பிளேடுகள், பென்சில், ஷார்ப்பனார்கள், கத்தரிக்கோல் போன்ற தையல் சார்ந்த பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இவற்றின் விலையும் உயர வாய்ப்புள்ளது.

மேலும் அரிசி ஆலை எந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரிசியின் விலையிலும் இதன் தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காசோலைகளுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதால் காசோலைகளுக்கான கட்டணத்தையும் வங்கி நிர்வாகத்தினர் உயர்த்தும் நிலை ஏற்படும்.

இந்நிலையில் அரிசி, பருப்பு மற்றும் பால் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story