புதிய சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்-ப.சிதம்பரம் எம்.பி. பேட்டி


புதிய சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்-ப.சிதம்பரம் எம்.பி. பேட்டி
x

புதிய சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் என ப.சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

புதுக்கோட்டை

இந்தியில் பெயர் மாற்றம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

3 குற்றவியல் சட்டங்களை மறுசீரமைத்து அதற்கு இந்தியில் பெயர் மாற்றம் செய்து புதிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.. நான் இந்தியில் பெயர் வைப்பது கூடாது என்று சொல்லவில்லை. ஆங்கிலத்தில் சொல்லும்போது ஆங்கில பெயர் இருக்க வேண்டும். இந்தியில் சொல்லும்போது இந்தி பெயர் இருக்க வேண்டும்.

இந்த சட்டங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் வரைவு சட்டம் தயாரிக்கப்படுகிறது. மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தில் இந்த சட்டத்தை எழுதும்போது ஆங்கிலத்தில் தான் எழுதப்படுகிறது. பிறகு இந்தியில் மொழி பெயர்க்கின்றனர். நீதிமன்றங்களில் ஆங்கில கடிதம் தான் பெரும் பகுதி பயன்படுத்தப்படுகிறது. இந்தி மொழி பெயர்ப்பை யாரேனும் எடுத்து சொன்னால் கூட அதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல், என்ன பிரிவு என்று நீதிபதிகளே கேட்கின்றனர். அதனால் ஆங்கிலத்தில் இருப்பது தான் எல்லோருக்கும் பழக்கமானது.

'நீட்' தேர்வு

ஆங்கில மொழி சட்ட வரைவுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும். அதனை இந்தியில் மொழி பெயர்த்துக்கொள்ளலாம். ஆனால் இவர்கள் ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதிவிட்டு பெயரை மட்டும் இந்தியில் வைக்கின்றனர். அது வாயிலேயே நுழையவில்லை. 'நீட்' தேர்வு விலக்கு தொடர்பாக தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது சாத்தியம் ஆகும். 'நீட்' தேர்வு ஏன் தமிழகத்திற்கு கூடாது என்று நான் பல காரணங்களை சொல்லியிருக்கிறேன். ஆனால் மத்திய அரசு அசைத்து கொடுக்கிற மாதிரி தெரியவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி சமூகவலைத்தளத்தில் கூறியிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். அதில் என்ன வியப்பு இருக்கிறது. 2023-ல் இருப்பதை விட 2033-ல் அதிகமாக தான் இருக்கும். 2033-ல் இருப்பதை விட 2043-ல் அதிகமாக தான் இருக்கும்.

கலெக்டருடன் சந்திப்பு

பொருளாதார உயர்வு என்பது எந்த ஆண்டு தான் உயராமல் இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு எந்த ஆண்டு பொருளாதாரம் உயரவில்லை. 2 சதவீதம், 3 சதவீதம், 4 சதவீதம் என உயர்ந்து கொண்டு தான் செல்கிறது. ஆண்டு ஒன்று போனால் வயதொன்று கூடும். அதுபோல் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவை சந்தித்து எம்.பி. நிதியின் கீழ் திருமயம், ஆலங்குடியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராமன் உடன் இருந்தார்.


Next Story