விவசாயிகளின் விவரங்களை பதிவிட புதிய வலைத்தளம்


விவசாயிகளின் விவரங்களை பதிவிட புதிய வலைத்தளம்
x

விவசாயிகளின் விவரங்களை பதிவிட புதிய வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நில விவரங்களுடன் விவசாயிகளின் விவரங்கள் மற்றும் நில உடைமை வாரியாக பயிர் சாகுபடி விவரம் ஆகிய விவரங்களை இணைப்பதற்காக கிரெயின்ஸ் (உற்பத்தியாளர் வலைதள பதிவு வேளாண்மை இடுபொருள் முறை) என்ற வலைத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் விவசாயிகள் பயன் அடையும் வகையில் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம், தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, உணவு வழங்கல் துறை, விதைச்சான்றளிப்புத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்பட 13 துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. கிரெயின்ஸ் ஒற்றை சாளர வலைத் தளமாக செயல்படுவதால் விவசாயிகள் மேற்காணும் துறைகளின் அனைத்து பயன்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை. நிதி திட்ட பலன்கள் விவசாயிகளின் ஆதார் எண் அடிப்படையில் அவரது வங்கி கணக்கிற்கு நேரடி பணப்பரிமாற்றம் செய்யப்படும். எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களின் ஆதார் அட்டை நகல், புகைப்பட நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் நில பட்டா நகல் ஆகிய ஆவணங்களை தங்கள் பகுதிக்கான சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இவர்களின் யாரேனும் ஒருவரிடம் உடனடியாக ஒப்படைத்து கிரெயின்ஸ் வலைத்தளத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை பதிவு செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


Next Story