நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலி; திருமணமான 3 நாளில் துயரம்


நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலி; திருமணமான 3 நாளில் துயரம்
x

திருமணமான 3 நாளில் நீர்த்தேக்கத்தில் மூழ்கி புதுமண தம்பதி பலியானார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். விவசாயி. இவருடைய மகன் பழனிகுமார் (வயது 30). இவர் கேரள மாநிலத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கும், தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த ராமய்யா மகள் முத்துமாரிக்கும் (21) கடந்த 10-ந்தேதி திருமணம் நடந்தது.

மாயமான தம்பதி

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் பழனிகுமார்-முத்துமாரி தம்பதி தங்களது வீட்டில் உணவு சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி சென்றனர்.

தொடர்ந்து மாலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பழனிகுமாரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. எனவே புதுமண தம்பதியை குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

மேலும் உறவினர்களின் வீடுகளுக்கு புதுமண தம்பதி சென்றனரா? அல்லது கேரளாவுக்கு மனைவியை பழனிகுமார் அழைத்து சென்றாரா? என பலரிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

நீர்த்தேக்கத்தில் பிணமாக மிதந்தனர்

இந்த நிலையில் நேற்று காலையில் மேல ஆத்தூரில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு இருந்த நீர்த்தேக்கத்தில் பழனிகுமாரும், அவரது மனைவி முத்துமாரியும் பிணமாக மிதந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தண்ணீரில் பிணமாக புதுமணத் தம்பதிகளின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களது உடல்களை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

போலீசார் விசாரணை

போலீசார் புதுமண தம்பதியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

நீர்த்தேக்கத்தின் கரையில் அமர்ந்து புதுமண தம்பதி பேசிக் கொண்டிருந்தபோது, முத்துமாரி தண்ணீரில் தவறி விழுந்ததால், அவரை காப்பாற்ற பழனிகுமார் முயன்றதில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

திருமணமான 3 நாட்களில் புதுமண தம்பதி நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story