திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்; நகராட்சி ஆணையாளரிடம் பா.ஜ.க. கோரிக்கை


திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்; நகராட்சி ஆணையாளரிடம் பா.ஜ.க. கோரிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளரிடம் பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரை சேர்ந்த தொழிலதிபரும், பா.ஜ.க. மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளருமான ஆர்.கார்த்திகேயன் திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் கீதாவிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ. நகரில் அமைந்துள்ள வ.உ.சி. தெரு மற்றும் விவேகானந்தர் தெரு ஆகியவற்றின் மத்தியில் பல வருடங்களாக கழிவுநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. இங்கு பன்றிகள் சுற்றித்திரிவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் இந்த குட்டை உள்ளது.

இதை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story