பணமதிப்பிழப்பு, ஒரு சுவையில்லா உணவு; நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதில்


பணமதிப்பிழப்பு, ஒரு சுவையில்லா உணவு; நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதில்
x

‘1991-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அரைவேக்காடானவை என்று நிர்மலா சீதாராமன் விமர்சித்து இருந்தார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ''1991-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அரைவேக்காடானவை. உண்மையான வழியில் அல்லாமல், சர்வதேச நிதியத்தின் நிர்பந்தத்தால் அவை செயல்படுத்தப்பட்டன'' என்று கூறினார்.

இந்தநிலையில், அந்த அரசில் நிதி மந்திரியாக இருந்த மன்மோகன்சிங்குக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நல்லவேளை, பணமதிப்பிழப்பு, பல அடுக்குகள் கொண்ட ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசல் மீது கொடிய வரிகள் என்று அதிகமாக வேகவைத்த, சுவையற்ற உணவுகளை மன்மோகன்சிங் பரிமாறவில்லை. கடவுளுக்கு நன்றி.

பல்கலைக்கழகத்தில் பேக்கரி மற்றும் சமையல் வகுப்புகளை நிதி மந்திரி எடுத்திருப்பார் போலும். அதை தெரியப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி. இவ்வாறு அவர் கிண்டலாக கூறியுள்ளார்


Next Story