'அமைச்சர் அவர்களே... உடனே ஆணையிடுங்கள்' - அமைச்சர் சேகர் பாபுவுக்கு நிர்மலா சீதாராமன் பதில்


அமைச்சர் அவர்களே... உடனே ஆணையிடுங்கள் - அமைச்சர் சேகர் பாபுவுக்கு நிர்மலா சீதாராமன் பதில்
x
தினத்தந்தி 21 Jan 2024 10:39 AM GMT (Updated: 21 Jan 2024 10:59 AM GMT)

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த அரசு அனுமதி மறுத்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

சென்னை,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் அந்த பதிவில், 'ஜனவரி 22ம் தேதியன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு வைரலானது. இந்த புகாருக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்து இருந்தார். அவர், 'சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது' என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபுவின் எக்ஸ் பதிவில் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். அவர் அதில், சேகர் பாபு அவர்களே, உங்கள் பதிவுக்கு பதில்கொடுக்கும் வகையிலே தரவுடன்/ஆதாரத்துடன் மக்கள் எடுத்துகாட்டுகிறார்கள். இந்துக்களின் வழிபாட்டு முறையில், மாற்றி மாற்றி, இடையூறுகளை ஏற்படுத்துவதை தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது.

மேலும், சின்ன சின்ன தனியார் கோவிலில் நடக்கும் ஏற்பாடுகளிலும், காவல்துறையினர் அங்கே இருந்து அனாவசிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். ஆதலால், அமைச்சர் அவர்களே, இந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் ரீதியில், அறநிலைய துறை அமைச்சராக நீங்கள் முன்நின்று காப்பாற்ற வேண்டும். தடையில்லையேல், உங்கள் அதிகாரிகளை, உடனே தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிடுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story