ஏ.ஆர்.ரகுமான் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை: ஐகோர்ட்டில், ஜி.எஸ்.டி. ஆணையர் பதில் மனு


ஏ.ஆர்.ரகுமான் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை: ஐகோர்ட்டில், ஜி.எஸ்.டி. ஆணையர் பதில் மனு
x

சேவை வரி கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் ஜி.எஸ்.டி. ஆணையர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

திரைப்பட இசையமைப்பாளர்கள், தங்களது படைப்புகளின் முழு காப்புரிமையையும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் வழங்கி விட்டால், சேவை வரி விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கவில்லை என்று கூறி ரூ.6 கோடியே 79 லட்சம் சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி., ஆணையர் கடந்த 2019-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், ஏ.ஆர்.ரகுமான் வழக்கு தொடர்ந்தார்.

தடை விதிப்பு

அதில், ''இசைப் படைப்புகளின் காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள்தான். இதற்காக என்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம். என் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும், ரூ.6 கோடியே 79 லட்சம் வரி செலுத்தவில்லை என கூறி, அதே தொகையை அபராதமாகவும் விதித்துள்ளார்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து, ஜி.எஸ்.டி. ஆணையரின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நோக்கம் இல்லை

அதில் கூறியிருப்பதாவது:-

வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில், அவரது புகழுக்கு களங்கப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே சேவை வரி நிர்ணயித்துள்ளது. அதை செலுத்தாததால் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், விசாரணையின்போது அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தபோது இசை குறிப்புகளை மட்டும் ஏ.ஆர்.ரகுமான் வழங்கவில்லை. அவர் இசையமைத்து, பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசை கருவி கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களின் சேவைகளை பயன்படுத்தி அவர் பாடல்களை பதிவு செய்துள்ளார்.

தீர்வு காணலாம்

எனவே, இந்த சேவை வரி அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை வரி நோட்டீசை எதிர்த்து, ஜி.எஸ்.டி., கவுன்சிலில் மேல்முறையீடு செய்து அவர் தீர்வு காணலாம். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story