பழனியில் முகாமிட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள்


பழனியில் முகாமிட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 3 Oct 2022 7:30 PM GMT (Updated: 3 Oct 2022 7:30 PM GMT)

சபரிமலை சீசனை முன்னிட்டு பழனியில் முகாமிட்டுள்ள வடமாநிலத்தவர்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திண்டுக்கல்

வடமாநிலத்தவர்கள் முகாம்


உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து செல்வார்கள். அதேபோல் சபரிமலை சீசன் காலத்திலும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.


மேற்கண்ட திருவிழாக்கள், சபரிமலை சீசன் காலத்தில் பழனி அடிவாரம், கிரிவீதி சாலையோரங்களில் அலங்கார பொருட்கள், விளையாட்டு பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெறும். இதற்காக சாலையோர பகுதியில் புதிது புதிதாக கடைகள் தோன்றும். இந்த கடைகளை பெரும்பாலும் வடமாநிலத்தவரே அதிகம் தொடங்குகின்றனர். இதற்காக அவர்கள் ஒரு மாதம் முன்னரே பழனியில் வந்து தங்குவது வழக்கம்.


ஆவணங்கள் சோதனை


அதன்படி இந்த ஆண்டு சபரிமலை சீசனை முன்னிட்டு தற்போது வடமாநில தொழிலாளர்கள் பழனியில் உள்ள இடும்பன் கோவில் பைபாஸ் சாலையோரம் தற்காலிக குடில் அமைத்து தங்கியுள்ளனர். வழக்கமாக பழனியில் முகாமிட்டுள்ள வெளிமாநிலத்தவர்களிடம் பழனி டவுன் போலீஸ் சார்பில் ஆதார் கார்டு, அடையாள அட்டை போன்றவை சோதனை செய்யப்படும். அந்தவகையில் தற்போது தங்கி உள்ள வட மாநிலத்தவர்களிடம் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை சோதனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக பழனி பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே பக்தர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பழனியில் தங்கி உள்ள வடமாநிலத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு, ஆவணங்கள் சோதனையை போலீசார் மேற்கொள்ள வேண்டும். மேலும் பக்தர்கள் கூடும் இடங்களில் அவர்கள் சுற்றி திரிவதால், அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Next Story