அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் செல்வாக்கை இழந்துவிட்டார் தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்


அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் செல்வாக்கை இழந்துவிட்டார் தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
x

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் செல்வாக்கை இழந்துவிட்டார். அவரது செயல்பாடுகள் கட்சியில் இருந்து நீக்கும் வகையில் இருக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி பரபரப்பு கடிதம் அளித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்து, அப்பதவியில் அமர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் விருப்பமாக இருக்கிறது. அதற்காக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெற இருக்கிறது.அ.தி.மு.க.வின் தலைமை பதவியை விட்டுக்கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் விரும்பவில்லை. எனவே அவரது தரப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடர்ந்து வழக்குகள் தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மீண்டும் முறையிடவும் முடிவு செய்துள்ளனர்.

தற்போது அ.தி.மு.க.வில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் 40 பக்கத்தில் விரிவான விளக்க அறிக்கை கடந்த வாரமே அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு விவரம் வெளியாகி உள்ளது.

கட்சி விரோத செயல்கள்

மனுவில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சி தொண்டர்களுக்கு ஏராளமான தொல்லைகளை கொடுத்து வந்தார். தனது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சுயநலத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களையும் துன்புறுத்தினார். அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் கட்சி விரோத செயல்களாகவே உள்ளன. கட்சி விதிகளை மீறுவதற்கு அவருக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

முதலில் அவர் பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தார். அது நடக்காமல் போகவே போலீஸ் மூலம் பொதுக்குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தினார். அதன்பிறகும் பொதுக்குழு கூட்டத்தை ரத்துசெய்ய மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார். இதில் எதிலும் பலன் கிடைக்காததால் தன்னை பற்றி சுயவிளம்பரம் செய்து கொண்டார். அதோடு தனது ஆதரவாளர்களை கட்சி நலனுக்கு எதிராக தூண்டிவிட்டார். அவர்கள் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக செயல்பட வைத்தார். இவை அனைத்துமே அ.தி.மு.க. கட்சி விதிகளுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் ஆகும். இதற்காக அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம்.

செல்வாக்கை இழந்துவிட்டார்

அ.தி.மு.க.வில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால் அந்த 2 பதவிகளும் காலாவதியாகிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் கட்சி விதிகளை கடைப்பிடிப்பதில் உண்மையானவராக இருந்திருந்தால் அதை அவர் பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அவர் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று கோர்ட்டில் போய் மனு கொடுத்தார். இதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவருக்கு அவராகவே தடை விதித்து கொண்டுள்ளார் என்பதுதான் உண்மை. ஆனால் உண்மையை மறைத்து ஒருதலைபட்சமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி தந்திருக்கிறார். அவரது கடிதம் கட்சி சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே அ.தி.மு.க. தொடர்பாக இனி அவரிடம் தேர்தல் ஆணையம் எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். அதுபோல அவருக்கு ஆதரவாக யார் மனு கொடுத்தாலும் அவர்களுக்கும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அவர் செல்வாக்கை இழந்துவிட்டார்.

நெருக்கடி நிலையில்...

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்கு எதிராக இருந்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெருக்கடியான காலக்கட்டத்தில் கட்சி விதி 20ஏ (7) பிரிவின்படி நிர்வாகிகள் கட்சியை வழிநடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் கட்சி வழி நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டுள்ளார். நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அவரது பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி வரும் வேளையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த கடிதம் அமைந்துள்ளது.


Next Story