கருவேல மரங்களை அகற்ற வேண்டும்


கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
x

சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை

தஞ்சை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையானது தம்பிக்கோட்டை தொடங்கி புதுக்கோட்டை எல்லையான கட்டுமாவடி வரை உள்ளது. கன்னியாகுமரி - சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த வழியாக ராமேஸ்வரம், மனோரா, வேளாங்கண்ணி, நாகூர், புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் உள்ளன. இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

கருவேல மரங்கள்

தஞ்சை மாவட்ட பகுதிகளான தம்பிக்கோட்டை வடகாடு, அதிராம்பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், சம்பைப்பட்டினம், செந்தலைப்பட்டினம், குப்பத்தேவன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் இருபுறமும் கருவேல மரங்கள் புதர் போல் மண்டி கிடக்கிறது.

இந்த கருவேல மரங்கள் படர்ந்து சாலையில் விழுந்து கிடக்கிறது. இதனால் சாலையில் எதிரே கனரக வாகனங்கள் வரும்போது இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. இந்த கருவேலமரங்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் சாலையை மறைத்து காணப்படுகிறது.

அகற்ற வேண்டும்

இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. சாலையில் செல்வோரின் முகம், கண்களை கருவேலமரங்களில் உள்ள முட்கள் குத்தி காயத்தை ஏற்படுத்துகிறது. எனவே கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள கருவேலமரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story