சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு


சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2022 7:45 PM GMT (Updated: 21 Oct 2022 7:46 PM GMT)

சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம்

சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

வீரவணக்க நாள்

லடாக் பகுதியின் ஹாட்ஸ் பிரிங்ஸ் என்ற இடத்தில் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதியன்று சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நினைவு தூணுக்கு மரியாதை

அதன்படி, சேலம் மாநகர காவல்துறை சார்பில் நேற்று வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கட்டிமுடிக்கப்பட்ட வீரவணக்க தூண் நேற்று காலை திறக்கப்பட்டது. இதில், போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா கலந்து கொண்டு வீரவணக்க தூணை திறந்து வைத்தார். பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவர் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், கடந்த 1.9.2021 முதல் 31.8.2022 வரை வீரமரணம் அடைந்த 264 பாதுகாப்பு படையினரின் தியாகத்தை போற்றி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story