பள்ளியில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம்


பள்ளியில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 9:59 AM GMT)

கோவில்பட்டியில் பள்ளியில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஒருவரின் 2 மகன்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். 8-ம் வகுப்பு மாணவன் பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்ததாகவும், அவனுக்கு ஆதரவாக அண்ணன் நடந்து கொண்டதாகவும் கூறி அவர்களை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

இந்த நிலையில் நேற்று மாணவர்கள் இருவரும் பள்ளிக்கு சென்றபோது, அவர்களை நிர்வாகம் பள்ளிக்குள் அனுமதிக்க வில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், பொருளாளர் செல்லத்துரை உள்ளிட்ட ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டனர்.

உடனே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி, கிராம நிர்வாக அலுவலர் நாகலட்சுமி, கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் ஆகியோர் அந்த பள்ளிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முடிவு எதுவும் எடுக்கப்படாததால், சம்பந்தப்பட்ட மாணவர்களும், அவர்களது பெற்றோர், உறவினர்களும் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களிடம் உதவி கலெக்டர் மகாலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story