மனு கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என புத்தாக்க பயிற்சியில் அதிகாரி பேச்சு
![மனு கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என புத்தாக்க பயிற்சியில் அதிகாரி பேச்சு மனு கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என புத்தாக்க பயிற்சியில் அதிகாரி பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/02/22/1154027-meeting.webp)
மனு கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்று புத்தாக்க பயிற்சியில் வேலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் பேசினார்.
மனு கொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்று புத்தாக்க பயிற்சியில் அதிகாரி பேச்சு
வேலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் பேசினார்.
புத்தாக்க பயிற்சி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் அனைத்து அரசுத்துறைகளில் பணியாற்றும் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி தொடங்கியது. பயிற்சி தொடக்க நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆய்வுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, துணை அலுவலர் சரவணமுத்து, கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் பாலாஜி, குற்றவியல் மேலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
அரசு அலுவலர்களான நாம் பொதுமக்களுக்கு சேவகனாக பணியாற்ற வேண்டும். மக்களின் வரிப்பணத்தில்தான் நாம் சம்பளம் வாங்குகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறார். அதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அலைக்கழிக்க கூடாது
குறித்த நேரத்தில் அனைவரும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றி விட்டு செல்ல வேண்டும். பல்வேறு விஷயங்களுக்காக மனுகொடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது. உங்கள் துறைக்கு தொடர்பு இல்லாத மனுக்கள் வந்தாலும் அதனை பெற்று சம்மந்தப்பட்ட அலுவலரை, எங்கு சென்று சந்திக்க வேண்டும் என்று தெரிவித்து பொதுமக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
இந்த பயிற்சியை அனைவரும் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், சட்டவிதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றின்படி சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற உதவி கலெக்டர் முருகன் பயிற்சி வழங்கினார். இதில் 30 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.