பல்லாவரத்தில் வணிக வளாகத்துக்கு 'சீல்' வைக்க வந்த அதிகாரிகள்; ஊழியர்கள் தடுத்ததால் பரபரப்பு


பல்லாவரத்தில் வணிக வளாகத்துக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்; ஊழியர்கள் தடுத்ததால் பரபரப்பு
x

பல்லாவரத்தில் வணிக வளாகத்துக்கு ‘சீல்’ வைக்க வந்த அதிகாரிகள் ஊழியர்கள் தடுத்ததால் திரும்பி சென்றனர்.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த பல்லாவரம் ரேடியல் சாலையில் சரவணா செல்வரத்தினம் வணிக வளாகம் உள்ளது. இதில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக புகார் எழுந்ததால் 2 வாரங்களுக்கு முன்பு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதற்கிடையில் வணிக வளாகத்துக்கு 'சீல்' வைக்கப்போவதாக தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்தநிலையில் நேற்று காலை வணிக வளாகத்துக்கு 'சீல்' வைக்க மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்தனர். ஆனால் அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்த ஊழியர்கள், வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 ஜெனரேட்டர்கள் மட்டும் பயன்படுத்துகிறோம். அவை பழுது அடைந்தால் மாற்று ஏற்பாடாக 2 ஜெனரோட்டர் வைத்திருப்பதாக வணிக வளாக நிர்வாகம் தரப்பில் கூறினர். அதற்கு அதிகாரிகள், கோர்ட்டு அனுமதித்தபடி 2 ஜெனரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூடுதலாக உள்ள ஜெனரேட்டர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். நீண்டநேர வாக்குவாதத்துக்கு பிறகு கூடுதலாக உள்ள ஜெனரேட்டகளை அகற்றுவதாக வணிக வளாக நிர்வாகம் தரப்பில் கூறினர். இதனால் வணிக வளாகத்துக்கு 'சீல்' வைக்காமல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் 6 மணி நேர போராட்டத்தை ஊழியர்கள் கைவிட்டனர்.


Next Story