நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மணிலா பயிரை அதிகாரிகள் ஆய்வு


நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மணிலா பயிரை அதிகாரிகள் ஆய்வு
x

விருத்தாசலம் பகுதியில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மணிலா பயிரை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் வட்டாரத்தில் நடப்பு காரீப் பருவத்தில் 760 ஹெக்டேர் பரப்பளவில் மணிலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருத்தாசலம் அருகே உள்ள சின்னவடவாடி, பெரியவடவாடி, எறுமனூர் ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மணிலா பயிரில் லீப் மைனர் எனப்படும் இலைச்சுருள் பூச்சி மற்றும் செம்பேன் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்த விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார், மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் விஞ்ஞானி இந்திராகாந்தி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் மேற்கண்ட பகுதியில் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மணிலா பயிர்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

விவசாயிகளுக்கு ஆலோசனை

அப்போது இலைச்சுருள் பூச்சியினை கட்டுப்படுத்த நோவலூரான் 10 சதவீதம் இ.சி. என்ற மருந்தை 1.5 மில்லி என்ற அளவில், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும், விளக்குப்பொறி ஒரு ஹெக்டேருக்கு 1 என்ற அளவில் பயன்படுத்தி தாய் அந்துப்பூச்சியினை கவர்ந்து அழித்திடலாம். செம்பேனை கட்டுப்படுத்த ஸ்பியூரோமெசிபென் என்ற மருந்தினை ஒரு மில்லி அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.


Next Story