கடலில் எண்ணெய் கசிவு அகற்றும் பணிகள்: வல்லுனர் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆய்வு


கடலில் எண்ணெய் கசிவு அகற்றும் பணிகள்: வல்லுனர் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆய்வு
x

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை எர்ணாவூர் பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. மழைநீருடன் கச்சா எண்ணெயும் கலந்து வந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை எர்ணாவூர் பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. மழைநீருடன் கச்சா எண்ணெயும் கலந்து வந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தோல் அரிப்பு, கண் எரிச்சல், தலைசுற்றல் மற்றும் சுவாச பிரச்சினைகளால் அவதிப்பட்டனர்.

மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கசிவுக்கான ஆதாரத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடலில் எண்ணெய் கசிவு சூழ்ந்துள்ள இடங்களில் அதனை அகற்றும் பணியில் தமிழக அரசு ஒருபுறமும், இந்திய கடலோர காவல்படை மறுபுறமுமாக பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து மாநில எண்ணெய் கசிவு நெருக்கடி மேலாண்மை வல்லுனர் குழுவுடன், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் எண்ணூர் மற்றும் பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் எண்ணெய் கசிவு அளவு குறித்தும் ஆய்வு செய்தார். எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து தொழில்நுட்ப குழுவின் அறிக்கையை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் எண்ணெய் கசிவு அகற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவு அகற்றும் பணியில் 20-க்கும் மேற்பட்ட படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


Next Story