ஏரியூர் அருகே மசக்கல் வனப்பகுதியில் கிடந்த மூதாட்டி எலும்புகூடு போலீசார் விசாரணை


ஏரியூர் அருகே  மசக்கல் வனப்பகுதியில் கிடந்த மூதாட்டி எலும்புகூடு  போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:46 PM GMT)
தர்மபுரி

ஏரியூர்:

ஏரியூர் அருகே மசக்கல் வனப்பகுதியில் மூதாட்டியின் எலும்புகூடு கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனத்துறையினர் ரோந்து

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள மசக்கல் வனப்பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மரத்தடியில் எலும்புகூடு ஒன்று கிடந்தது. மேலும் அதன் அருகே சிவப்பு மற்றும் நீல நிறத்தில் சேலையும் கிடந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் உடனடியாக ஏரியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் எலும்புக்கூடை பார்வையிட்டனர். பின்னர் எலும்புகூடை பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வழிதவறி வனப்பகுதிக்குள் சென்றார்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் எலும்புக்கூடு பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட தெய்வபுரத்தை சேர்ந்த முனியன் மனைவி முத்தம்மாள் (வயது 80) என தெரியவந்தது.

இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் டீக்கடை மேடு பகுதியில் உள்ள வனப்பகுதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தெருக்கூத்து பார்க்க சென்றதும், பின்னர் அவர் இரவு நேரத்தில் வழிதவறி வனப்பகுதிக்குள் சென்று மாயமானதும் தெரியவந்தது. இதையொட்டி மூதாட்டி காணாமல் போனது குறித்து ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story