தண்ணீர் தொட்டியில் முதியவர் பிணம்

கிணத்துக்கடவு அருகே வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் முதியவர் பிணமாக கிடந்தார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள சொலவம்பாளையம் வி.ஜி.பி. பாலாஜி நகரை சேர்ந்தவர் தயாளன் (வயது 88). இவர் தனது மகள் சோபனாவுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு தயாளன் தனது அறைக்கு தூங்க சென்றார். இதற்கிடையில், சோபனா தந்தையை பார்க்க அவரது அறைக்கு சென்றார். ஆனால் அவர் அங்கு இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சோபனா தனது மகன்களுடன் தயாளனை தேடினார். சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பார்த்தனர். அப்போது அந்த தொட்டியில் தயாளன் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சோபனா இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தயாளன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தயாளன் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






