சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

ரிஷிவந்தியம் அருகே சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியானாா்.
ரிஷிவந்தியம்;
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தாவடிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலன்(வயது 67). இவர் தனது பேத்திக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக மேலப்பழங்கூருக்கு உறவினர்களுடன் சரக்கு வாகனத்தில் புறப்பட்டார். அந்த சரக்கு வாகனத்தின் பின்புறமுள்ள கதவில் பாலன் அமர்ந்திருந்தார். மேலப்பழங்கூர் ஏரி அருகில் வந்தபோது ஒரு பள்ளத்தில் சரக்கு வாகனம் இறங்கி ஏறியது. அப்போது பாலன், சரக்கு வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பாலன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






