கடத்தூர் அருகே பயங்கரம்அரை பவுன் தோடுக்காக மூதாட்டி கழுத்தை நெரித்துக்கொலைமர்ம நபர் குறித்து விசாரணை


கடத்தூர் அருகே பயங்கரம்அரை பவுன் தோடுக்காக  மூதாட்டி கழுத்தை நெரித்துக்கொலைமர்ம நபர் குறித்து விசாரணை
x

கடத்தூர் அருகே அரை பவுன் தோடுக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி

தர்மபுரி,

கடத்தூர் அருகே அரை பவுன் தோடுக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி பிணம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் கந்தம்மாள் (வயது 70). இவர், இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால் இவருக்கு திருமணமாகவில்லை. இவர் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று காலை கந்தம்மாளின் உறவினா் சிவனேஸ்வரன் மூதாட்டி வீட்டுக்கு சென்றார். அப்போது கந்தம்மாள் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சிவனேஸ்வரன், மூதாட்டியின் அண்ணன் ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் வீட்டுக்கு விரைந்து வந்தார்.

நகைக்காக கொலை

தகவல் அறிந்த கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மூதாட்டி உடலை பார்வையிட்ட போது அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் கந்தம்மாள் காதில் அணிந்து இருந்த அரை பவுன் தங்க தோடு காணாமல் போய் இருந்தது.

எனவே நகைக்காக கந்தம்மாளின் கழுத்தை நெரித்து மர்மநபர்கள் கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்்ந்து போலீசார், கந்தம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மர்மநபருக்கு வலைவீச்சு

இதற்கிடையே கந்தம்மாளை கொலை செய்தது அந்த பகுதியை சேர்ந்தவராகத்தான் இருக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் கந்தம்மாள் வீட்டின் அருகே யாராவது வந்து சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரை பவுன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story