13 பவுன் நகைக்காக வயரால் கழுத்தை இறுக்கி மூதாட்டி கொலை


13 பவுன் நகைக்காக வயரால் கழுத்தை இறுக்கி மூதாட்டி கொலை
x

தாரமங்கலம் அருகே 13 பவுன் நகைக்காக வயரால் கழுத்தை இறுக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.

சேலம்

தாரமங்கலம்:

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மூதாட்டி

தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு வடக்கு கிராமம் துட்டம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி சின்னம்மாள் (வயது 70). இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கந்தசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் சின்னம்மாள் துட்டம்பட்டியில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இவர் தினமும் துட்டம்பட்டி வக்கீல்காடு பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு, மாலை வீட்டுக்கு வருவது வழக்கம்.

வயரால் கழுத்தை இறுக்கி கொலை

அதன்படி நேற்று அவர் தோட்டத்துக்கு சென்றார். பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சின்னம்மாளின் பேரனான விஜயகுமார் இரவு 9 மணி அளவில் தோட்டத்துக்கு வந்து அவரை தேடினார். அப்போது அங்கிருந்த மோட்டார் அறைக்குள் சென்று பார்த்தார்.

அங்கு சின்னம்மாள் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, காதில் அணிந்திருந்த தோடு உள்பட 13 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

போலீசார் விசாரணை

இதனால் பதறிபோன விஜயகுமார் இந்த கொலை குறித்து தாரமங்கலம் போலீசார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தாரமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதாவும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.

இதனிடையே மூதாட்டி கொலை குறித்து அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தோட்டத்தில் திரண்டனர். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

பரபரப்பு

இதையடுத்து போலீசார் சின்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நகைக்காக நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாரமங்கலம் அருகே 13 பவுன் நகைக்காக மூதாட்டி வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story