கோழிகளை ஏற்றி சென்ற வாகனம் மீது ஆம்னி பஸ் மோதல்
![கோழிகளை ஏற்றி சென்ற வாகனம் மீது ஆம்னி பஸ் மோதல் கோழிகளை ஏற்றி சென்ற வாகனம் மீது ஆம்னி பஸ் மோதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/12/1445201-accident1.webp)
கோழிகளை ஏற்றி சென்ற வாகனம் மீது ஆம்னி பஸ் மோதியது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் இருந்து சிறுவாச்சூருக்கு 540 கோழிகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனத்தின் பின்பக்க டயர் பஞ்சரானது. இதையடுத்து சரக்கு வாகன டிரைவர் வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் பகுதியை சேர்ந்த ராசையா (வயது 38), சரக்கு வாகனத்தை சாலையோரம் திருப்பிய போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் வந்த ஒரு தனியார் ஆம்னி பஸ் மோதியது. இதில் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் ராசையா லேசான காயமடைந்தார். ஏராளமான கோழிகள் செத்தன. ஆம்னி பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், பாடாலூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான சரக்கு வாகனம், பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.