மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மாணவர் பலி:2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மாணவர் பலி:2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 April 2023 6:45 PM GMT (Updated: 29 April 2023 6:45 PM GMT)

தேனி அல்லிநகரத்தில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மாணவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

தேனி அல்லிநகரம் கீரைக்கல் பஜார் தெருவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகன் ஸ்ரீராம் (வயது 15). இவர், ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் வீரஅருண் (15), கோகுல் (13). நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் செல்லும் சாலை சந்திப்பு அருகில் புறவழிச் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை வீரஅருண் ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக அசாம் மாநிலத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அதில் ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story