ஆவணி மூலத்திருவிழாவில்உலவாக்கோட்டை அருளிய அலங்காரத்தில் சுந்தரேசுவரர்- 27-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை


ஆவணி மூலத்திருவிழாவில்உலவாக்கோட்டை அருளிய அலங்காரத்தில் சுந்தரேசுவரர்- 27-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் உலவாக்கோட்டை அருளிய அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் உலவாக்கோட்டை அருளிய அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.

உலவாக்கோட்டை அருளிய லீலை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் 5-வது நாளான நேற்று காலை உலவாக்கோட்டை அருளிய லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் உலவாக்கோட்டை அருளிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்னவாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர்.

புராண வரலாறு

விழாவில் உலாவக்கோட்டை அளித்த லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:- அடியார்க்கு நல்லார் என்ற ஒரு அடியார் மதுரையில் தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே உண்ணும் கொள்கை உடையவராக இருந்தார். அவரது செல்வம் வற்றிய போதும் கடன் பொற்றாவது தனது கடமையை ஆற்றி வந்தார். கடனும் கிடைக்காத நிலையில் அவர் தனது மனைவியுடன் சோமசுந்தரரைத் தரிசித்து பின் உயிர் நீப்பது என கருதி கோவிலுக்கு சென்றார்.

அவரது தர்மநெறியின் உண்மை நிலை கண்ட இறைவன் அசரீரியாக தோன்றி, "வீட்டிற்கு செல்... அங்கே உனக்காக அள்ள அள்ள குறையாத நெல்மணிகளை கொண்ட உலவாக்கோட்டை ஒன்றை அளித்துள்ளோம்" என்று கூறினார். அதன்படியே இருவரும் வீடு திரும்பி உலவாக்கோட்டை மூலம் கிடைத்த நெல்மணிகளை கொண்டு கடைசி காலம் வரை சிவனடியார்க்கு உணவளித்து வாழ்ந்தனர் என்று புராணம் கூறுகிறது.

பிட்டுக்கு மண் சுமந்த லீலை

ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதற்காக சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி காலை 5 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பாடாகி வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு செல்வார்கள்.

அங்கு மதியம் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். சுவாமி கோவிலில் இருந்து கிளம்பி இரவு மீண்டும் கோவிலுக்கு வரும் வரை நடை சாத்தப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் பக்தர்கள் அனுமதி கிடையாது.

ஆனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி வெளிபிரகாரங்கள் நடை திறக்கப்பட்டு, ஆடிவீதிகள், அன்னதானம் கூடம், கலைக்கூடம் ஆகிய பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி இரவு கோவிலுக்கு வந்த பிறகு மீண்டும் நடை திறந்து பூஜைகள் நடைபெறும்.


Next Story